தஞ்சாவூரில் பல்லவர் கால நந்தி கண்டறியப்பட்டது
தஞ்சாவூர்: பூதலூர் அருகே சித்திரக்குடியை சேர்ந்த முனைவர் சத்தியா வழங்கிய தகவலின் அடிப்படையில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் மற்றும் பொந்தியாகுளம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தில்லைகோவிந்தராஜன், ஆசிரியர் ஜெயலட்சுமி ஆகியோர் சித்திரக்குடி அருகே உள்ள வயலில் ஆய்வு செய்தனர்.
வயலில் பாதி புதைந்த நிலையில் காணப்பட்ட நந்தி, 9-10ம் நுற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்தது என மணிமாறன் தெரிவித்தார். நந்தியின் கழுத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மணிமாலை அணிந்திருந்தது.
அதே பகுதியில், ஆனந்தகாவேரி வாய்க்காலின் தென்கரையில், தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்கு கீழாக வாய்க்கால் கரையில் பாதி புதைந்த நிலையில், மூன்று அடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்டது. இப்பகுதியில் ஒரு பெரிய சிவன் கோவில் இருந்து முற்றிலும் அழிந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது.
பிற்காலத்தில் அந்த பகுதியில் புதியதாக கோவில் ஒன்று அமைக்கப்பட்ட நிலையில், 8ம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர் கால நந்தி ஒன்று கண்டறியப்பட்டது. இந்த நந்தியின் அடிபீடத்தில் பல்லவர் கல்வெட்டு இரண்டு வரி கொண்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்லவர் கால எழுத்துப் பொறிப்புடன் இருந்து முதன்முதலாக கண்டறியப்பட்ட இது சிறப்பான கண்டுபிடிப்பு என மணிமாறன் குறிப்பிட்டார்.